சத்தியமங்கலத்தில் இரவில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக இலகுரக வாகனங்கள் இரவில் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவுநேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்றது. இந்த நிலையில், சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் இலகுரக வாகனங்கள் இரவிலும் செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து, அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கோவை – பெங்களூரு சாலையில் மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணி வரை இலகுரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் – திம்பம் வனப்பகுதி சாலையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மணிக்கு 30 கிமீ வேகத்திற்கு செல்ல கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. 27 கிமீ சாலையில் உள்ள கிராம மக்களின் வாகனங்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கி அனுமதிக்கலாம் என்றும் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்களுக்கு எப்போதும் அனுமதி இல்லை எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 27 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையில் ஒவ்வொரு 5 கிமீ தூரத்திற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.