கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா… மே.5ம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை..!

ள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார்.

மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா நேற்று முன் தினம் (ஏப்.04) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் முக்கிய நிகழ்வாக உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம்.

இரண்டு ஆண்டு கொரொனா ஊரங்கைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கோலாகலமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் பெரும் திரளாக மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த வைபவத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்தார். இச்சூழலில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக தங்கக்குதிரையில் கள்ளளழகர் ஆற்றில் இறங்கும் இடங்களில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள், மதுரை மேயர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் நிகழ்வில் பாஸ் இருந்தால் மட்டுமே எவருக்கும் அனுமதி என்றும், அதிகாரிகள், பெரிய நபர்களுக்கு தெரிந்தவர்கள் என்பதற்காக அனுமதிக்கக்கூடாது எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது கள்ளளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி வரும் வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார்.

முன்னதாக மதுரை சித்திரைத் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க கள்ளகழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வன்று தொடங்கி 5 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நேற்று முன் தினம் சித்திரைத் திருவிழா தொடங்கிய நிலையில், கோயில் கம்பத்தடி மண்டபத்தின் அருகேயுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு வெண்பட்டுகள் சுற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

கொடி மரத்தின் முன்பாக மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமிக்கும், அம்மனும் பல்வேறு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது.