கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது உண்மையா..? சிபிசிஜடி பல்வேறு கோணங்களில் விசாரணை..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மாணவியின் பெற்றோர்கள் தங்கள் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி போராட்டம் நடத்தி வந்தனர். அமைதியான முறையின் நடைபெற்ற போராட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையாக வெடித்தது. பள்ளியின் வளாகத்திற்குள் நுழைந்த கும்பல், 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.

கள்ளக்குறிச்சி கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அன்றே பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி திங்களகிழமை விசாரணையை தொடங்கியது. மேலும் மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே வெளியான மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவி இறப்பதற்கு முன்பாக அவரது உடலில் புதிதாக காயங்கள் இருந்ததாகவும் அவரது உள்ளாடைகளில் இரத்தக்கறை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்பு விலாப்பகுதியில் எலும்பு முறிவு இருந்ததாகவும் அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 3 வது மாடியிலிருந்து மாணவி குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் நிலையில், சிபிசிஐடி போலீசார் மனித உருவில் பொம்மையை தயார் செய்து, அதனை மாடியிலிருந்து கீழே எறிந்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவியின் மரணத்தை குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட தடயவியல் மற்றும் விசாரணைக்குழு பல்வேறு கோணங்களில் தகவல்களை திரட்டி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை காவல்துறை வெளியிட்டது. சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ் தலைமையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆசிரியர்களின் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் நிலையில், அதுக்குறித்து விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

விசாரணைக் குழுவினர், மனித உருவ பொம்மையை கீழே விழு வைத்தும் இவ்வளவு உயரத்தில் இருந்து விழுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. யாரேனும் மாணவியை கீழே தள்ளிவிட்டனரா எனும் கோணத்தில் விசாரிக்கும் வகையில் பொம்மையை உயரத்தில் இருந்து பலமுறை தூக்கி எறிந்தும் , அதன் தாக்கத்தை அதிகாரிகள் அளவிட முயன்றதாகவும் கூறப்படுகிறது. வேறு யாரேனும் தள்ளினால் அதன் பாதிப்பு என்னவாகும் என்றும் கண்டறிய முயன்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மாணவி இறப்பதற்கு முன்பே உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர். மேலும் சிறுமி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றன.