கலாஷேத்ரா பாலியல் விவகாரம்.. மாணவிகளிடம் மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை.!!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.

பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் கூறிய குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது.

மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி 6 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும், பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி தலைமையிலான குழு இன்றும் விசாரணை நடத்துகிறது.