இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்க தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் அயலகத் தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர் மேலும் போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது, தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல்
நடத்தி வருகிறது,

இதனிடையே இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது,
உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், தனியாக இருப்பதை தவிர்த்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும் எனவும் அவசர தேவைக்கு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அங்குள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது,

இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்க தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் அயலகத் தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 15 நபர்கள் அயலகத் தமிழர் நலவாரியத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், அவர்கள் 15 பேரும் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 நபர்களும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், போர் தீவிரமடைந்தால் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.