மின்சாரம் தாக்கி உளவுத்துறை போலீஸ் மரணம்..

திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவல்காரபாளையம் இவரது சொந்த ஊர். அங்குள்ள வள்ளுவர் நகரில் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் மராமத்து வேலைகள் நடந்து வருகிறது.
புதிதாக கட்டப்பட்ட சுவற்றுக்கு நேற்று காலை எழுந்ததும் தண்ணீர் விடும் பணியில் கார்த்திகேயன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் மின்சார வயரில் பட்டு இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அதனால் தூக்கி வீசப்பட்டு மூர்ச்சையான அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கார்த்திகேயன், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பெட்டவாய்த்தலை போலீஸார் கார்த்திகேயனின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் குடும்பத் தலைவரை இழந்து கார்த்திகேயன் ,குடும்பத்தினர் கதறி அழுதது அவரது உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.