அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்.எஸ்.புரத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வை மாணவி சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்வில் மதிப்பெண்கள் குறைந்து விடுமோ என்ற பயத்தில் அவர் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று சாணிப்பவுடரை வாங்கி வந்தார். பின்னர் வீட்டில் வைத்து கரைத்து குடித்தார்.

சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.