கஞ்சா போதையில் தனியாக இருக்கும் பெண்களின் வீட்டு கதவை தட்டும் வாலிபர் -10 நாட்களாக தூங்காமல் தவிக்கும் ஊர் மக்கள்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தளவாய்பாளையம், கரட்டுபாளையத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கோட்டூர் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கரட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 20). இவர் தினசரி மது மற்றும் கஞ்சா போதையில் இரவு நேரத்தில் தனியாக உள்ள பெண்களின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார். மேலும் அவர் மோட்டார் சைக்கிள்கள், ஆடு, செல்போன் ஆகியவற்றை திருடி வருகிறார்.

ராஜா எங்கள் ஊர் பகுதியை சேர்ந்த பள்ளிக்கு செல்லும் சிறுவர்களுக்கு கஞ்சா கொடுத்து அவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் அவர் போதையில் கோவிலுக்கு செல்லும் பெண்கள் முன்பு நிர்வாணமாக நின்று தகாத வார்த்தைகளால் பேசி துன்புறுத்தும் செயலை செய்கிறார். இதன் காரணமாக எங்கள் ஊர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 10 நாட்களாக இரவில் தூங்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம்.எனவே தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வரும் ராஜாவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அளித்த புகாரில் கூறியிருந்தனர்.

புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் கஞ்சா போதையில் பெண்கள் முன்பு நிர்வாணமாக நின்று தொந்தரவு கொடுத்து வரும் ராஜாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.