கர்நாடகாவில் சர்ச்சைக்குள்ளான இரு ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

பொது வெளியில் குற்றசாட்டுகளை கூறி மோதிக்கொண்ட பெண் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை.

கர்நாடக மாநிலத்தில் ரூபா ஐ.பி.எஸ்., ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரூபா, ரோகினி ஆகியோர் இடையே மோதல் போக்கு அதிகரித்து, சர்ச்சனையான நிலையில் அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பெண் ஐஏஎஸ் ரோகிணி மீது பொதுவெளியில் குற்றசாட்டு கூறிய ரூபா ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதுபோன்று, ரூபா குற்றச்சாட்டுக்கு பதிலடியாக அறிக்கை வெளியிட்ட பெண் ஐ.ஏ.எஸ் ரோகிணியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்திய பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மோதலில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ், ஆளும் பாஜக எம்எல்ஏ ஒருவரை சந்தித்த புகைப்படத்தை ரூபா ஐபிஎஸ் அதிகாரி வெளியிட்டிருந்தார்.

சக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலருக்கு ரோகிணி அந்தரங்க படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் ரூபா குற்றசாட்டியிருந்தார். கர்நாடகா அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி, 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ரூபா குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக அவரை மனநோயாளி என ரோஹினி விமர்சித்திருந்தார். இது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு தரப்பியிலும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பொதுவெளியில் 2 பெண் அதிகாரிகள் குற்றச்சாட்டு கூறி மோதி கொண்டது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்த நிலையில், ரூபா, ரோஹிணிக்கு கர்நாடகா தலைமை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொதுவெளியில் குற்றசாட்டுகளை முன்வைக்க கூடாது என்று எச்சரித்த நிலையில், இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மைசூரில் சக பெண் அதிகாரி ஷில்பா நாக் என்பவருடன் ஏற்பட்ட மோதலால் இடமாற்றம் செய்யப்பட்டவர் ரோகிணி ஐ.ஏ.எஸ். தற்போது ரூபா ஐபிஎஸ் அதிகாரியுடன் ஏற்பட்ட மோதலால் மீண்டும் மாற்றப்பட்டார் ரோகிணி சிந்தூரி. எனவே, ரோகிணி ஐஏஎஸ் அதிகாரி தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

மேலும், ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் கணவர் முனீஸ் முட்கில் ஐஏஎஸ்-எம் இடமாற்றம் செய்யப்பட்டார். கர்நாடகா அரசின் நில அளவைத்துறை ஆணையராக இருந்த முனீஸ் முட்கில் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்படி, கர்நாடக அரசின் நிர்வாகத்துறை செயலாளராக முனீஸ் முட்கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு சிறையில் இருந்தபோது சசிகலா லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகை பெற்றதாக குற்றசாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் ஐபிஎஸ் அதிகாரி ரூபா என்பது குறிப்பிடத்தகத்து.