கோவையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 40 சதவீதம் பேர் இணைப்பு – தேர்தல் பிரிவு அதிகாரி தகவல்..!

கோவை: நாடு முழுவதும் வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களிடையே போதிய ஆர்வம் இல்லை. குறிப்பாக மாநகரம், நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஆதார் எண் இணைப்பதில் அக்கறை காட்டவில்லை என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரி கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 12 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே (40 சதவீதம்) ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் எண் இணைப்பதன் மூலம் தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற முடியும். ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி போன்ற கிராமங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
அதேவேளையில் சென்னை, கோவை போன்ற மாநகரப் பகுதிகளில் 20 மற்றும் 40 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெற வேண்டும். எனவே, வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் படிவத்தை நிரப்பிக் கொடுத்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ள வேண்டும். தவிர தேர்தல் ஆணையத்தின் nvsp இணையதளம் வழியாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற கைப்பேசி செயலி வழியாகவும் ஆதார் எண்ணை இணைத்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.