ஆத்தூர் அருகே கோர விபத்து: ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் 4 பெண்கள் ஒரு சிறுமி உள்பட 6 பேர் உயிரிழப்பு -6 பேருக்கு பலத்த காயம்..

சேலம்: ஆத்தூர் அருகே ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் வேனில் சென்ற 4 பெண்கள் ஒரு சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் 6 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆத்தூர் வட்டம் துலுக்கனூர் கிராமம் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பைபாஸ் மேல்புறம் சுமார் நேற்று இரவு 12:30 மணி அளவில் சேலத்திலிருந்து சென்னை நோக்கி TN-NL01B078 சென்ற விஜயலட்சுமி தனியார் பேருந்தும் ஆத்தூர் முல்லைவாடி கிராமத்திலிருந்து வந்த TN 42 U 4717 ஆம்னி வேனும் மோதியது.

இந்த பயங்கர விபத்தில் ஆம்னி வேனில் வந்த சரண்யா க .பெ. சுதாகர்,வயது 23, சுகன்யா க.பெ சந்தோஷ் குமார்,வயது 27, சந்தியா த.பெ மயில்வாகனன்,வயது 23, ரம்யா த.பெ ஆனந்தன்,வயது 25, ராஜேஷ் த‌.பெ ஆனந்தன், வயது 21 ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்‌. தன்ஷிகா த.பெ. சந்தோஷ் குமார்,வயது 11 என்பவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விபத்துக்கு உள்ளானவர்கள் ஆத்தூரில் லீ பஜார் பகுதியில் தங்களது உறவினரின் 30 ஆம் நாள் கும்பிடும் துக்க நிகழ்ச்சிக்காக வந்தவர்கள். இரவு நேரத்தில் டீ அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை பக்கம் ஆம்னி வேனில் அனைவரும் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டது.

சாலை விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேனில் பயணம் செய்த சுதா க.பெ மாரிசாமி,வயது 36, பெரியண்ணன் த.பெ பெரியசாமி, வயது 38, புவனேஸ்வரி த.பெ ஹரிமூர்த்தி,வயது 17, கிருஷ்ணவேணி க.பெ செல்வராஜ்,வயது 45, உதயகுமார் த.பெ சிவகுமார் வயது 17 ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலை விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.