இலக்கை துல்லியமாக தாக்கும்… இந்தியாவின் “பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை” பரிசோதனை வெற்றி.!!

அந்தமான் நிகோபார் தீவில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்துள்ளது.ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் பிற பாதுகாப்பு அதிகாரிகள் ஏவுகணை சோதனையை மேற்பார்வையிட்டனர்.அப்போது,இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில்,பிரம்மோஸ் ஏவுகணை ஏர் ஸ்டாஃப் இன்ஸ்பெக்ஷனின் (CASI) போது இந்திய விமானப்படை பிரிவில் இருந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் வெடித்து சிதறியது.

இதனால் அங்குள்ள உடைமைகள் மற்றும் உபகரணங்களுக்கு மிகக் குறைந்த சேதம் ஏற்பட்டது,ஆனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து,பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இந்தியா கடிதம் அனுப்பி, இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தும், அறிக்கையும் வெளியிட்டது.

பிரம்மோஸ் என்பது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணையாகும்,இது நிலம் மற்றும் வான்வெளி என எங்கிருந்தும் ஏவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.