ஹலோ!! வெளிநாட்டிலிருந்து பேசுகிறோம்… வாட்ஸ் அப் காலில் நட்பாக பேசி மோசடி செய்யும் கும்பல்… எச்சரிக்கும் போலீஸ்.!!

வெளி நாடுகளில் இருந்து வாட்ஸ் அப் காலில் பேசி நட்பாக பழகி மோசடி செய்யும் கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக சைபர் க்ரைம் போலீஸார் கூறியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக வெளிநாட்டு வாட்ஸ் அப் கால் மோசடி நடைபெறுவதாக பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 84,+62,+63,+212,+917 ஆகிய எண்ணில் தொடங்கிய மலேசியா, கென்யா, எத்தியோபியா, வியட்நாம் போன்ற நாடுகளின் கூடுதல் மூலமாக பல்வேறு அழைப்புகள் வாட்ஸ் அப் மூலமாக வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற தெரியாத வாட்ஸ் அப் எண்ணில் இருந்து வரும் வெளிநாட்டு கால்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவுகள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து தமிழக சைபர் க்ரைம் பிரிவு போலீஸாருக்கு தெரியவந்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லிங்கிடு இன், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக நட்பாக பழகி வெளிநாட்டிலிருந்து பேசுவது போல் வாட்ஸ் அப் கால் மூலமாக மோசடி செய்வதாக தெரியவந்தது. முதலில் நட்பாகப் பேசி பரிசு பொருள் அளிப்பதாக தெரிவித்து, பின்பு விலை மதிப்பு அதிகம் உள்ள பொருள் அனுப்பப்படுவதாக கூறி மோசடி செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த விலைமதிப்பு அதிகம் உள்ள பொருள் விமானம் மூலம் வந்தடைந்ததாக கூறி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகள் போல் பேசி, சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான வரி செலுத்த வேண்டும் எனக்கூறி மோசடி செய்வதாக போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறாக 110 புகார்கள் இந்த ஆண்டு மட்டும் வந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை, பல்வேறு லோன் செயலிகள் மூலமாக 5 ஆயிரம் வரை பணம் பெற்றவர்கள் அந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யும்போது செல்போனில் உள்ள டேட்டாக்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை பொதுமக்கள் தந்து விடுவதால் அதை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக லோன் செயலியின் மூலம் கடன் பெற்றவர்கள் செல்போனில் வைத்திருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன் எண்களை திருடி ஆபாசமாகவும் மிரட்டும் வகையிலும் பணத்தைப் பறிப்பதாக தெரிவித்துள்ளனர்.

உறவினர்களை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப் மூலமாக புகைப்படங்களை அனுப்பி தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் இதுபோன்ற சைபர் க்ரைம் கும்பல்கள் வெளிநாட்டில் இருந்து அழைப்பது போல், வெளிநாட்டு எண்களில் வாட்ஸ் அப் மூலமாக கடன் வாங்கியவர்களை தொடர்பு கொண்டு மிரட்ட பயன்படுத்துவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவை யாவும் உண்மையாக வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகள் அல்ல. இவ்வாறாக கடன் செயலிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் மிரட்டல் கால்கள் தொடர்பாக 1600 புகார்கள் இந்த வருடம் வந்துள்ளதாக சைபர் க்ரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறு தெரியாத வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் வாட்ஸ் அப் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் ஆகியவற்றில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், அவ்வாறு கிளிக் செய்யும் போது செல்போனில் உள்ள டேட்டாக்கள் மற்றும் வங்கிக்கணக்கு தொடர்பான டேட்டாக்களை திருடி பண்த்தை மோசடி செய்யும் கும்பல் வாட்ஸ் அப் கால் மூலமாக அதன் பயனாளர்களை குறிவைத்து மோசடி செய்யப்படுவதாகவும் சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.