கத்தியை காட்டி மிரட்டி மனைவி, மகனை கடத்திய மாற்றுத்திறனாளி கணவன்..!

கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 56). இவரது மகளுக்கும் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கோபிநாத் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து வந்து கோவையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கணவரை பிரிய முடிவு செய்த ஜெயக்குமாரின் மகள் கோவை கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த தீபாவளியன்று கோவை வந்த கோபிநாத் தனது மனைவியை தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று கோபிநாத் காரில் தனது உறவினர்கள் சிலருடன் கோவை வந்தார். அப்போது அவரது மனைவி வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் மீண்டும் அவர் செல்ல மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் மற்றும் அவருடன் வந்தவர்கள் கத்திமுனையில் மிரட்டி அவரது மனைவி மற்றும் மகனை காரில் கடத்தி சென்றனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த சில நாட்களாக கடத்தல் சம்பம் நடந்து வருகிறது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.