சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் : தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், 110-ன் கீழ் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது, கிராம சபை கூட்டங்கள் நடத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மேலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார். அந்த வகையில் ஜனவர் 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களுடன் இனி வரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 – உலக தண்ணீர் தினத்தன்றும் நவம்பர் 1 – உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வருகிற 15-ம்தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி வரும் 15-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், கிராம சபை கூட்டம் நடைப்பெற உள்ள இடம் நேரம் ஆகியவை கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22-ம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.