வெள்ளிங்கிரி மலை ஏறிய பட்டதாரி இளைஞர் திடீர் மரணம் – நடந்தது என்ன..?

கோவை : ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லிங்க ரெட்டி வீதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 22) பிஎஸ்சி பட்டதாரி. இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் கோவை அருகே உள்ள வெள்ளிங்கிரி மலை கோவிலுக்கு வர திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்தனர். அடிவாரத்தில் இருந்து மலை ஏற தொடங்கினார்கள். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் 6-வது மலையில் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது தமிழ்ச்செல்வனுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது . இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை பரிசோதித்துப் பார்த்தனர் . அப்போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோவில் அடிவாரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மலையிலிருந்து அவரது உடலை அடிவாரத்துக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..