இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்க கட்டுப்பாட்டை தளர்த்தியது ஜெர்மனி..!

புதுடெல்லி: நேட்டோ அணியில் இல்லாத நாடுகளுக்கு சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களை விற்பனை செய்வதில் ஜெர்மனி அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

இந்தியா நேட்டோ அணியில் இல்லை என்பதால், இந்தியாவால் ஜெர்மனியிடமிருந்து சிறிய ரக ஆயுதங்களை வாங்க முடியாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது ஜெர்மனி அரசு இந்தியாவுக்கான ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாகவும் இதன் பகுதியாக சமீபத்தில் இந்திய தேசிய பாதுகாப்புப் படைக்குத் தேவையான துப்பாக்கி உதிரி பாகங்களை வழங்க ஜெர்மனி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா – ஜெர்மனி இடையிலான ஆயுத விற்பனை கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக கொண்டிருந்த கட்டுப்பாட்டை ஜெர்மனி தளர்த்தி வருகிறது.

இதனால், இந்திய ராணுவம், துணை ராணுவம், காவல் துறை தங்களுக்குத் தேவையான துப்பாக்கிகள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களை நேரடியாக ஜெர்மனியிடம் இருந்து வாங்க முடியும். இது தவிர்த்து இந்தியாவுடன் இணைந்து ஆயுத பாகங்கள் தயாரிப்பது குறித்தும் ஜெர்மனி ஆர்வம் காட்டி வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.