கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து – 6 ஆடுகள் பலி..!

சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனியை  சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.   ஆறுமுகத்தின் மனைவி துளசி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்ததோடு வீட்டின் ஒரு புறம் கட்டி வைக்கப்பட்டிருந்த 6 வெள்ளாடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்து காரணமாக வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசிபி இளங்கோ, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதிகள் ஆறுச்சாமி, ரமேஷ் கிளைச் செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தீ விபத்தில் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டதோடு வீட்டின் உரிமையாளர் ஆறுமுகத்திற்கு கொமாரபாளையம் ஊராட்சி திமுக சார்பில் ரூ. 5 ஆயிரம் நிதி உதவி வழங்கினர். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..