பழநி முருகன் கோயில் பக்தர்களுக்கு இலவச சுக்கு காபி..!

ழநி: பழநி முருகன் கோயிலில் தினமும் 5,000 பக்தர்களுக்கு தலா நூறு மி.லி. சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் வருகை ஒரு வாரமாக அதிகரித்துள்ளது.

அதிகாலை 4.30 மணி முதல் படிப்பாதை, யானைப் பாதை வழியாக மலைக் கோயிலுக்கு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பசியோடு மலையேறும்போது களைப்பு தெரியாமல் இருக்க கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக சுக்கு காபி நேற்று முதல் வழங்கப்படுகிறது.

மலையேறும் வழியில் இடும்பர் கோயில் அருகே காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருவருக்கு 100 மி.லி. சுக்கு காபி வீதம் தினமும் 5,000 பக்தர்களுக்கு வழங்க உள்ளனர். சீசன் காலங்களில் கூடுதலாக வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.