வெளிநாட்டு வங்கி ஊழியர் வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை-மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 37). இவர் சிங்கப்பூரில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அர்ஜூன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல் , மோதிரம், செயின், ஆரம் உள்ளிட்ட 7¾ பவுன் தங்க நகைகள், 1¾ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். சிங்கப்பூரில் இருந்து அர்ஜூன் நேற்று ஊருக்கு திரும்பி வந்தார். அவர் தனது வீட்டிற்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து 7¾ பவுன் தங்க நகைகள், 1¾ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.