பேமலியே இங்க தானா… ரூ.58 கோடி ஊழல்.. FIR -ல் A1 ஆக இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் அவரது மகன்கள் A2, A3 ல் இடம் பெற்றுள்ளனர்..!!

கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரையுள்ள அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.

இவர் வருமானத்திற்கும் அதிகமாக ஏராளமான சொத்துக்கள் இவர் மீது பல புகார்கள் எழுந்தது. அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் காமராஜ், இவரது மகன்கள் இனியன், இன்பன், நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

மேலும் இவர் தனது நண்பர்கள், உறவினர்கள் பெயரில் சுமார் ரூ.58.44 கோடி மதிப்பில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மண்ணார்குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 49 இடங்களில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தஞ்சையில் உள்ள அவரது சம்பந்தி டாக்டர் மோகன் வீட்டிலும், திருவாரூர், திருத்துறைப்பூண்டியிலுள்ள ராயநல்லூர் கிராமத்தில் வசிக்கும் இவரது மைத்துனர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ராதாகிருஷ்ணன் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, சென்னையில் மைலாப்பூர் உள்ளிட்ட 6 இடங்களிலும், கே.கே.நகர் ஐயர் தோட்டம், திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி, கோயம்பத்தூரில் உள்ள இவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 49 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 கோடியே 44 லட்சத்து 36 ஆயிரத்து 252 ரூபாய் சொத்துக்கள் குவித்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. இதில் A1 ஆக முன்னாள் அமைச்சர் காமராஜரும், A2, A3 ஆக இவரது மகன்கள் இனியன், இன்பனும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டின் முன் அவரது தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது. மேலும் கடந்த இரண்டு நாட்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரும், ‘நமது அம்மா’ நாளேடுவின் வெளியீட்டாளருமான வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.