17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்- தொழிலாளி போக்சோவில் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த 22 வயது கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்றும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். அப்போது தொழிலாளி சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது தனியாக இருந்த சிறுமியை அவரது காதலன் அருகே உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வருமாறு அழைத்தார். இதனையடுத்து சிறுமி அங்கு சென்றார். பின்னர் சிறுமியை அவரது காதலன் திருமண ஆசை வார்த்தை கூறி அங்கலக்குறிச்சியில் உள்ள கோவிலுக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து அவர் சிறுமியை திருமணம் செய்தார்.பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு ஆழியாறு போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுமியை தொழிலாளி கடத்தி சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆழியாறு போலீசார் தஞ்சம் அடைந்த 2 பேரையும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கடத்தி சென்று திருமணம் செய்த தொழிலாளி மீது குழந்தை திருமணம், கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைது செய்யப்பட்ட தொழிலாளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.