முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய ஆலோசனை ..!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) வருகிற மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகளை வருகிற பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனிடையே அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்தில், மார்ச் மாதம் 20ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புதிய திட்டம், அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முக்கியமாக, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட மகளிர் உரிமைத்தொகையாக பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட சில அறிவிப்புகளை மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இவருடன் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் உடனிருந்தார். 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 20-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதலமைச்சருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.