ஊட்டி மார்லி மந்து அணை பகுதியில் சுற்றி திரியும் புலி – பீதியில் மக்கள்..!

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊட்டி அடுத்த மார்லிமந்து பகுதியில் புலி ஒன்று சுற்றித்திரிந்தது.

இதையடுத்து அந்த புலி மார்லிமந்து அணை பகுதியில் ஒரு மாட்டை தாக்கியது. இதன் பின்னர் எச்.பி.எப். சர்ச் பகுதியிலும் ஒரு எருமையை தாக்கியது. இதையடுத்து அந்த புலி சோலூர் பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மார்லிமந்து பகுதிக்கு வந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை மார்லிமந்தில் இருந்து தாவணெ செல்லும் சாலையோரம் அந்த புலி சுற்றி திரிந்தது. இதை அந்த வழியாக காரில் சென்ற சுற்றுலா பயணிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.
இதற்கிடையே மார்லிமந்து பகுதியில் வனப்பகுதியில் விறகு சேகரிக்க செல்லும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கு புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.