வேலூரில் பேட்டரி பைக் வெடித்து தந்தை, மகள் உயிரிழப்பு.!!

வேலூர் அருகே எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தந்தை, மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்து வருபவர் துரைவர்மா. இவர் நேற்று இரவு தனது எலக்ட்ரிக் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டார். இந்நிலையில், திடீரென எலக்ட்ரிக் பைக்கில் பொறுத்தப்பட்டிருந்த பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் காரணமாக வீடு முழுவதும் புகைமூட்டமாக மாறியுள்ளது. சத்தம் கேட்டு எழுந்த துரை வர்மாவும், அவரது மகள் ப்ரீத்தியும் தீ விபத்தில் இருந்து தப்பிக்க வீட்டு கழிவறையில் தஞ்சமடைந்தனர்.

புகைமூட்டம் கழிவறையையும் சூழ்ந்ததால் இருவரும் அதிலிருந்து தப்பிச்செல்ல முடியாமல் மயங்கி விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, கழிவரையில் இறந்துகிடந்த தந்தை, மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்த விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.