மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் முன்னாள் அரசு ஊழியர் தீக்குளித்து தற்கொலை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ் .சந்திரபாபுரத்தை சேர்ந்தவர் ஆண்டிசாமி ( வயது 69) இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார் .அவர் கொடுக்க மறுத்தார். இதனால் மனம் உடைந்த ஆண்டிசாமி நேற்று அவரது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார். இது குறித்து அவரது மனைவி ரோஸ்லீ பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.