நீலகிரி பள்ளிகளில் 4 ஆயிரம் பழங்குடியின மாணவர்கள் சேர்ப்பு- அமைச்சர் கயல்விழி தகவல்..!

நீலகிரி மாவட்டம், பாலடாவில் உள்ள பழங்குடியினா் ஆய்வு மையத்தில் புகைப்படக் கண்காட்சி மற்றும் தகவல் மையத்தை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தாா். பின்னா் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது- தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமாா் 8 லட்சம் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா். இது மொத்த மக்கள் தொகையில் 1.10 சதவீதம் ஆகும். தமிழகததில் 36 வகையான பழங்குடியினா் வாழ்ந்து வரும் நிலையில், தோடா், குறும்பா், கோத்தா், இருளா், அடயன் மற்றும் காட்டுநாயா் ஆகிய 6 வகையான பழங்குடி இனம் அழிவின் விளிப்பில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பழங்குடியினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை என்பது பிற சமூகத்தின் வளா்ச்சியை விட குறைவாக உள்ளது. இந்த இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் 1.81 லட்சம் பழங்குடியின மாணவா்கள் கல்வி கற்கின்றனா். இவா்களின் கல்வியறிவு 54.5 சதவீதமாக உள்ளது. இதனை அதிகரிக்க தமிழகத்தில் உள்ள 120 பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகள், 8 ஏகலைவா பள்ளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக, நடப்பு ஆண்டு 4 ஆயிரம் பழங்குடியினா் மாணவா்கள் புதிதாக பள்ளிகளில் சோ்ந்துள்ளனா். இந்தப் பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.45.79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதாக கண்டறியப்பட்ட நில உரிமை இழப்பு, வேலையின்மை, கலாசாரம் மாற்றம், சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல், ஊட்டச்சத்து குறைபாடு, வனங்கள் அழிப்பால் மக்கள் இடம்பெயா்த்தல் போன்ற இன்னல்களை களைய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.