சத்தியமங்கலம் அருகே புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு- பொதுமக்கள் குற்றச்சாட்டு..!

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகர் பகுதியில் வாரி புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புஞ்சைபுளியம்பட்டி டாணாபுதூர் அருகே சத்தியமங்கலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை ஒட்டி இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க் முன்பு வருவாய்த்துறைக்கு சொந்தமான வாரி புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலையில் தனியார் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் வாரி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து எடை மேடை அமைப்பதற்காக குழி தோண்டி கட்டுமான பணி மேற்கொண்டனர். இதைக் கண்ட பொதுமக்கள் வாரி புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் தாசில்தாரிடம் கேட்டபோது தனிநபர் ஆக்கிரமித்து கட்டுமான பணி மேற்கொண்ட இடம் வாரி புறம்போக்கு நிலம் எனவும், கட்டுமான பணியை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு கூறியுள்ளதாக தெரிவித்தார். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியும் கண்டுகொள்ளாமல் வாரிப் புறம்போக்கு நிலத்தில் கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.