தேர்தல் விதிமீறல்: அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தர்மபுரி தொகுதி வேட்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். அப்போது, பிரச்சாரத்தின் இறுதி நாளன்று தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தியதாக அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் 6 பேர் மீது தர்மபுரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ், ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இறுதி நாள் பரப்புரை ஊர்வலத்தில் தான் பங்கேற்கவில்லை என்றும், வழக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை. எனவே, தன் மீதான தேர்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, பாமக இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.