நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நீர் திறப்பு..!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1,180 கன அடியாக இருந்து வருவதால், ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதுபோல புழல் ஏரியும் இன்று திறக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. நேற்றைய நிலவரப்படி (நவம்பர் 1ந்தேதி) அதில் 2,675 மி.கன அடி தண்ணீர் இருந்தது. மேலும், ஏரிக்கு 150 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றைய நிலவரப்படி, ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 20.29 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளித்தது. மேலும் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23 அடியை தொட்டது. இதனால் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது.

இன்று காலை 6மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது 1180 கனடியாக உள்ளது. நீர் வெளியேற்றுமானது 150 கன வழியாக இருக்கிறது ( மெட்ரோ குடிநீருக்கு 108 கன அடி, சிப்காடுக்கு 3 கன அடி, நீர்ப்பாசனத்துக்கு 5 கன அடி) 24 அடி கொள்ளளவில் 20. 64 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. சுமார் 2.7 டிஎம்சி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ளது. தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்து ஆனது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருவதால் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓட துவங்கி உள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 100 கனஅடி நீரை இன்று மதியம் மூன்று மணிக்கு திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன் அடிப்படையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மக்களுக்கு மற்றொரு குடிநீர் ஆதாரமாக இருக்கும் புழல் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 2000 கன வந்து கொண்டிருப்பதால், புழல் ஏரியின் மொத்த கொள்ளளவ 3300 கன அடியில் தற்போது 2692 கன அடி நீர் இருப்பு உள்ளது. இதன் காரணமாக புழல் ஏரியில் இருந்தும், மதியம் 3 மணியளவில் புழல் ஏரியிலிருந்து, வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.