கள் குடியுங்கள்… டாஸ்மாக் வேண்டாம் – கோவையில் அண்ணாமலை பரப்புரை.!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தக் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கோவை ஆனைக்கட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவரும், அக்கட்சின் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “குடியினால் எல்லோருக்கும் பிரச்சினை ஏற்படும். கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம். ஒரு டாஸ்மாக் கடையல்ல அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வந்துள்ளோம். கள்ளுக்கடைகளை திறந்து டாஸ்மாக் கடைகளை மூடுவோம். டெல்லிக்கு போகும் ஒரே வண்டி இந்த வண்டிதான். மற்றவை எல்லாம் லோக்கல் வண்டி.” என்றார்.

பழங்குடி மக்களின் பாதுகாவலனாக மோடி இருக்கிறார் எனவும் அவர் கூறினார். முன்னதாக, கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, புத்தரச்சல், கெங்கநாயக்கன் பாளையம், கொடுவாய், அவிநாசிபாளையம் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும், ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாமல் மக்களைச் சென்றடைய வேண்டுமானால், அது பாஜக பாராளுமன்ற உறுப்பினரால்தான் முடியும். கோயம்புத்தூரைப் பொறுத்தவரை, வாக்குகளுக்குப் பணம் கொடுப்பதில்லை என்ற முடிவோடு, மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, பொதுமக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை எதிர் நோக்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் அண்ணாமலை ஆகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவரும் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.