டிஜிட்டல் கரன்சி: ஒரே நாளில் 275 கோடிக்கு வர்த்தகம் செய்து சாதனை.!!

த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் உரையின் போது காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசின் கடன் பத்திரங்களை வாங்கவோ விற்கவோ, வங்கிகள் டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்துவதற்காக முதற்கட்டமாக நேற்றில் இருந்து டிஜிட்டல் கரன்சி பயன்படுத்தப்படுகிறது.

அதிலும் குறிப்பாக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சிகளைப் பயன்படுத்தி அரசின் பத்திரப் பறிமாற்றங்களில் ஈடுபட எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட ஒன்பது வங்கிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இன்னும் ஒரு மாதத்தில் சில்லறை வணிகப் பிரிவிலும் டிஜிட்டல் கரன்சிகளைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், டிஜிட்டல் கரன்சியில் பங்கு கொண்ட ஒன்பது வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி மூலம் 48 பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டதன் மூலம் ஒரே நாளில் 275 கோடிக்கு அரசு கடன் பத்திரங்களின் வர்த்தகம் நடைபெற்றது என்றும், டிஜிட்டல் கரன்சியின் மதிப்பு ரூபாயின் மதிப்பிற்கு நிகராக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் கரன்சிக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.