கோவை நகை பட்டறையில் ரூபாய் 40 லட்சம் தங்கம் திருடிய தம்பதி கைது

கோவை நகை பட்டறையில் ரூபாய் 40 லட்சம் தங்கம் திருடிய தம்பதி கைது

மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி ரோட்டில் பழனிக்குமார் என்பவரது நகைப் பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி கணவன் – மனைவி இருவரும் வடமதுரை வி.எஸ்.கே நகரில் வாடகைக்கு தங்கி இருந்து வந்தனர். 9 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பாண்டியராஜன் வேலை செய்து வந்ததால் இவரை நம்பி விட்டு விட்டு உரிமையாளர் பழனி குமார் வெளியே செல்வது வழக்கம். இந்நிலையில் பட்டறையில் உள்ள நகைகளை திருடி இருவரும் வெளியூர் சென்று அதனை விற்று ஜாலியாக இருக்கலாம் என்று தொழிலாளி பாண்டியராஜனிடம் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி நகை பட்டறையில் யாரும் இல்லாத போது 800 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு மனைவியை அழைத்துக் கொண்டு பாண்டியராஜன் வெளியூர் தப்பிச் சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தம்பதியை தேடி வந்தனர். தஞ்சாவூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பாண்டியராஜனையும் அவருடைய மனைவி உமா மகேஸ்வரியின் கைது செய்து அவர்களிடம் இருந்து 800 கிராம் தங்கத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 40 லட்சம் இருக்கும். கைதான இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.