தொடர் மழை எதிரொலி : சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு-பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது.

50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் நீர்மட்டம் 10 அடிக்கும் குறைவானது. இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் தாக்கம் காரணமாக கோவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

அதுவும் குறிப்பாக சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம், நேற்று முழுவதும் தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைபெய்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து 36 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து 25 கோடி லிட்டர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 100 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அதுபோன்று கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றும் மழை பெய்தது. இதனால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் அதிகளவில் வந்ததால் நேற்று சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்காக அடிவாரத்தில் உள்ள சாடிவயல் சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.