சட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள்… உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..!

ட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டதாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இரண்டாவது நாளாக இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாதங்களை முன்வைத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், கட்சியின் திருத்த விதிகளுக்கும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என கட்சியின் சட்ட திட்ட விதிகளில் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்தார்.

கடந்த 2021 டிசம்பரில் நடந்த செயற்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறும் தீர்மானங்கள் ஏதும் 2022 ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவில் முன் வைக்கப்படவில்லை. மாறாக புதிய நிர்வாகிகளின் தேர்தல், நியமனத்தை பதிவு செய்து, பாராட்டு தெரிவிக்கும் வகையிலேயே தீர்மானங்கள் வைக்கப்பட இருந்தன. அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இதைக் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாகக் கூறிய அவர், சட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டதாகவும், 75 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கட்சியில் உள்ளனர். இதில் பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 10 மாவட்ட செயலாளர் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த நிபந்தனைகள் முன்பிருந்தே பின்பற்றப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு இல்லை என பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், தற்போது தான் இந்த நிபந்தனைகள், சொந்த நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

உள்கட்சி ஜனநாயகத்துக்கு விரோதமாக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும், கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு இல்லை எனும்போது ஏதேனும் உயர்ந்த பதவிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தினால், யாருக்கு ஆதரவு இல்லை என்பது தெரியும் எனக் குறிப்பிட்டார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து வழக்கின் விசாரணை திங்கள் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.