கண்களை கவரும் வகையில் பொள்ளாச்சியில் பறந்த வண்ண வண்ண பலூன்கள்… உற்சாகத்தில் பார்வையாளர்கள்..!

பொள்ளாச்சி: தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் விடுமுறை நாட்களான இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை பலூன் திருவிழா நடக்கிறது. பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் இன்று காலை பலூன் திருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட டைனோசர், கரடி, கார்ட்டூன், டினோ உள்ளிட்ட வடிவிலான 10-க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
சுமார் 60 அடி முதல் 100 அடி வரை உயரம் கொண்ட இந்த ராட்சத பலூன்கள் தங்கள் வீடுகளுக்கு மேல் பறந்து சென்றதை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர். பலர் செல்போன்களில் வீடியோ எடுத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தனர். பலூன் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து இருந்தனர். சுமார் 300 அடி உயரத்துக்கு மேல் பறந்து செல்லும் வெப்பக்காற்று பலூனில் பயணிக்கும் போது பொள்ளாச்சியின் அழகான நிலப்பரப்பை, கழுகு பார்வையில் பார்க்க முடியும். பொள்ளாச்சியில் காற்றின் வேகம், தட்பவெப்பம் ஆகியன இந்த விழா நடத்த ஏதுவாக அமைந்துள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.