யூ-டியூப் சேனலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை..!

தெலுங்கானா மாநிலம், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (23). இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

குவாலியரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.எம் நிறுவனத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் தீனா, தன்னுடைய முயற்சியால் யூ-டியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் ஆன்லைன் விளையாட்டு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

இவர் உருவாக்கிய யூ-டியூப் சேனலுக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தீனா கடந்த சில நாட்களாக விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் 5-வது மாடிக்குச் சென்ற தீனா அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சைராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.