கோவை சாலை விபத்து – 2 பேர் பலி..

கோவை ராமநாதபுரம் தேவர் வீதியை சேர்ந்தவர் கேசவன் குட்டி. இவரது மகன் நந்தகுமார் (வயது29) இவர் ரத்தினபுரியை சேர்ந்த சபரி (வயது 22) என்பவருடன் ஸ்கூட்டரில் பொள்ளாச்சி ரோட்டில் ஆத்துபாலம் சந்திப்பில் உள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் இருந்து வேகமாக வந்த வேன் இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நந்தகுமார் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து ஸ்கூட்டர் ஓட்டி வந்த சபரி கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த வேன் டிரைவர் சதீஷ் (வயது 38 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி, பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் விக்னேஷ் ( வயது 25)இவர் நேற்று தனது பைக்கில் கோவை திருச்சி ரோட்டில் ஒண்டிபுதூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவரது பைக் மீது மோதியது . இதில் விக்னேஷ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் . இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தாளியூர், காந்தி நகரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ரங்கராஜ் (வயது 43) மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.