கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ரெய்டு-லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!

கோவை:கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி ‘ரெய்டு’ நடத்தி, கணக்கில் வராத, ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கோவைப்புதுாரில் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை 4:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில் போலீசார் உள்ளே புகுந்தனர்.அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல், போக்குவரத்து ஆய்வாளர்கள் அனைவரும் இருந்தனர். அவர்கள் யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அலுவலக கதவுகளை அடைத்த போலீசார், அலுவலர்களின் உடை, உடைமைகள், டேபிள் டிராயர்கள் உட்பட அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு தேடினர்.இதில் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள், பணியாளர்களிடம் இருந்த ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, 8 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து துறை அலுவலர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டுக்கு வந்திருப்பதாக தகவல் பரவிய அடுத்த வினாடியே சுற்று வட்டார பகுதிகளில் இருந்த புரோக்கர்கள், ஜெராக்ஸ் கடை நடத்துவோர், டிரைவிங் பயிற்சி பள்ளி ஊழியர்கள், லேமினேஷன் கடைக்காரர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். அந்த இடமே வெறிச்சோடி காணப்பட்டது.