தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கோவை பிளஸ் 1 மாணவர் நீரில் மூழ்கி பரிதாப பலி..

கோவை அருகே உள்ள தெலுங்குபாளையம் ,பாரதி ரோட்டை சேர்ந்தவர் சிவகுமார் ,இவரது மகன் நவீன் குமார் (வயது 15) இவர் டவுன்ஹாலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது சக நண்பர்கள் 3 பேருடன் ஆலந்துறையை அடுத்துள்ள பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணை பகுதிக்கு குளிக்க சென்றனர். சக நண்பர்களுடன் நீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். நவீன் குமார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதைக் கண்ட நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.ஆனாலும் நவீன் குமார் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தடுப்பணையில் இறங்கி பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். பிறகு மாணவனின் உடல் மீட்கப்பட்டது.மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.