கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று காலமானார் – நாளை உடல் அடக்கம்..

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் ( வயது 55) கடந்த 4 மாதங்களாக சுவாச கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்..இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில் உள்ள மடத்தில் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தூங்கிக் கொண்டிருந்த போது திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டது .அவரை கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில் உள்ள மடத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (புதன்)மாலை 3 மணிக்கு காமாட்சிபுரம் மடத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இயற்கை எய்திய சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தனது 20 வயதில் துறவியானார். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளார்..கோவை ஒண்டிபுதூர் காமாட்சிபுரத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தையும், 51 சக்தி பீடமும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சிற்றம்பலத்தில் கோளறுபதி நவகிரக கோட்டை என்ற பெயரில் மிகப்பெரிய சிவன் ஆலயம் கட்டியுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் நன்மதிப்பு வைத்திருந்தார்.மலேசியா ,சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் கோவை காமாட்சிபுரம் ஆதினத்தின் பல்வேறு கிளைகள் செயல்பட்டு வருகிறது..இவரது வேண்டுகோளுக்கு இணங்க பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார்கள். இவரது மடத்தின் மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். கொரோனா காலத்தில் சுவாமிகள் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று கோவில் பூசாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவச உதவிகள் செய்து வந்தார். இவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் பக்தர்களும் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.