கோவை அரசு ஆசிரியரிடம் ரூ.30 லட்சம் நூதன மோசடி- பெண் உட்பட 2 பேர் கைது..!

கோவை ஒண்டிபுதூர் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கார்த்திக் பிரபு. இவர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட விரும்பினார். இதற்காக கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ஜெகநாத் சிங், கலைவாணி ஆகியோரை அணுகினார் . அப்போது காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். அந்த நிலம் கார்த்திக் பிரபுவுக்கும் அவரது மனைவிக்கும் பிடித்திருந்தது. இந்த நிலத்துக்காக ரூ.30 லட்சம் “அட்வான்ஸ்”ஆக கொடுத்தால் தான் அடுத்த கட்ட பணியை மேற்கொள்ள முடியும் என்று ஜெகநாத் சிங் கூறினார். இதையடுத்து ரூ.30 லட்சத்தை ஆசிரியர் கார்த்திக் பிரபு முன்பணமாக கொடுத்தார். ஆனால் மேற்கொண்டு வீட்டுமனையை பத்திர பதிவு செய்து கொடுக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை கேட்ட போதும் காலம் தாழ்த்தினார். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் கார்த்திக் பிரபு விசாரித்த போது வேறு ஒருவரது நிலத்தை காட்டி முன்பணம் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது. இந்த மோசடி குறித்து ராமநாதபுரம் போலீசில் கார்த்திக் பிரபு புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து ஜெகநாத் சிங் கலைவாணி ஆகியோரை நேற்று கைது செய்தார். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் . இந்த மோசடி தொடர்பாக அந்த நிறுவன ஊழியர்கள் இளவரசி ,தேவி, சரண்ராஜ், ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான ஜெகநாத் சிங் மீது இதுபோன்று மேலும் பல மோசடி வழக்குகள் உள்ளது.