பணிக்கு வராமலேயே வந்ததாக வருகை பதிவேட்டில் போலி கையெழுத்திட்ட கோவை அரசு மருத்துவமனை டாக்டர் சஸ்பெண்ட்.. அமைச்சர் மா. சுப்ரமணியன் அதிரடி ..!!

கோவை அரசு மருத்துவமனையில் இதயவியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் டாக்டர் முனுசாமி இவர் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராமலே வருகை பதிவேட்டில் பணிக்கு வந்ததாக போலியாக குறிப்பிட்டு வந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு மருத்துவர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர் .இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் அனைத்து அரசு மருத்துவமனை முதல்வர்களுக்கான (டீன்) ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இந்த புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இதய வியல் துறை தலைவர் டாக்டர். முனுசாமியை பணியிடை நீக்கம் ( சஸ்பெண்ட் )செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:- கோவை வந்த அமைச்சர் , துறைசெயலாளர் ஆகியோர் டாக்டர்களின் வருகை பதிவேட்டினைஆய்வு செய்தனர் .அதில் இதயவியல் துறைத் தலைவர் முனுசாமி முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான ஆணை கோவை அரசு மருத்துவமனைக்கு இன்னும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.