கோவை கார் வெடிப்பு விவகாரம் .. முதல்வருக்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்..!

கோவை : கோவை சம்பவத்தை போன்று மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை வழங்க கடமைப்பட்டுள்ளதாக கூறி, பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கோவை உக்கடம் கார் வெடிப்பு விவகாரம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

கோவை சம்பவ விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழக பாஜக வரவேற்பதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக். 23ஆம் தேதியன்று அதிகாலை கார் ஒன்று வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் ஜமேசா முபின் என்பதும், 2019ஆம் ஆண்டில் அவரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேர் மீதும் ஊபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முபினின் உறவினரான மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளார். உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார். கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், “தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.

(1) தேச விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள், (2) தமிழக காவல்துறையின் உளவுத்துறை உலக புகழ் பெற்றது. சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தொடர் தோல்விகளுக்குப் பின்பு உளவுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக முன்னெடுங்கள், (3) திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.

(4) நீங்கள் பதவி ஏற்கும் போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள். மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தமிழ்நாடு பாஜக உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.