கோவை ஏஜென்சி உரிமையாளரின் வெற்று காசோலையை நிரப்பி ரூ.1 கோடி மோசடி..!

கோவை போத்தனூர் சபரி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் ( வயது 58). ஏஜென்சி நிறுவன உரிமையாளர். இவருக்கு தொழிலை விரிவுப்படுத்த பணம் தேவைப்பட்டது. அதற்காக தனக்கு தெரிந்த சேலம் குகை பஜனை மடம் வீதியை சேர்ந்த ஜெயராமன் (53) என்பவரின் வீட்டு ஆவணங்களை பெற்று வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றார். அப்போது, பாலசுப்ரமணியன் வெற்று காசோலையில் கையெழுத்திட்டு ஜெயராமனிடம் கொடுத்திருந்தார். இந்நிலையில், வங்கியில் பெற்ற கடனை அடைத்தவுடன் பாலசுப்ரமணியன் வீட்டு ஆவணங்களை பெற்று அதனை ஜெயராமனிடம் ஒப்படைத்தார். பின்னர் தான் கொடுத்த வெற்று காசோலையை திருப்பி கொடுக்குமாறு அவரிடம் கேட்டார். அதற்கு ஜெயராமன் முன்னுக்குப் பின் முரணான பதிலை கூறி காலம் தாழ்த்தி வந்தார். இதனால், சந்தேகமடைந்த பாலசுப்ரமணியன் விசாரித்த போது, வெற்று காசோலையை நிரப்பி ஜெயராமன் தனது வங்கி கணக்கில் ரூ.1 கோடி டெபாசிட் செய்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியன் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜெயராமன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.