மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி – தப்பி ஓடிய திருடனை மடக்கி பிடித்த போலீஸ்காரர்..!

கோவை சூலூர் திருச்சி ரோட்டை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). போலீஸ்காரர். இவரது மனைவியின் பாட்டி இருகூர் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிவகுமார் மனைவியின் பாட்டியை பார்ப்பதற்காக இருகூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் பின்னால் நின்று அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் சிவகுமார் அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த அந்த மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உடனே சிவகுமார் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து சிவகுமார் அந்த மர்ம நபரை துரத்தி மடக்கி பிடித்தார். பின்னர் அந்த மர்ம நபரை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அந்த மர்ம நபர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பனை ஊரைச் சேர்ந்த முருகன் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.