இரு தரப்பினிடையே மோதல்: தி.மலை தேர்த் திருவிழாவில் பதற்றம்- 1000 போலீசார் குவிப்பு.!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தேவிகாபுரம் 500 ஆண்டுகள் பழமையான பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும். இதில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒரு நாள் திருவிழா நடத்துவதற்கு பட்டியலின வகுப்பை சேர்ந்த நபர் நடத்துவதற்கு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போதே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் கோவில் திருவிழாவில் ஒரு நாள் நடத்துவதற்காக அறநிலையத் துறையிடம் முறையிட்டுள்ளனர். அப்போது மற்றொரு தரப்பிலிருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குவாதம் முற்றவே, அறநிலையத் துறையை சேர்ந்த அதிகாரிகள் கோவில் திருவிழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து அறிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றொரு தரப்பு மற்றும் பொதுமக்கள், கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்றும், அறநிலை துறை அதிகாரிகள், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, நேற்று காலை முதல் தேவிகாபுரம் பகுதியில் உள்ள கடைகளை அடைத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், போலீஸார் தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் தலா 3 பேருக்கு காயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று தேவிகாபுரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேவிகாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில், வருடாவருடம் அமைதியாக நடைபெற்று இருந்த இந்த கோவில் திருவிழாவை, பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே சீர்குலைத்து, திருவிழாவே நடக்க முடியாத அளவிற்கு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.