ராணுவத்தை தயார் நிலையில் இருக்கும்படி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவு- எல்லையில் போர் பதற்றம் ..!

திர்வரும் 2027ம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயாராக இருக்குமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தைவான் மீதான சீன ஜனாதிபதியின் நோக்கத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். சிஐஏ இயக்குனரான வில்லியம் பர்ன்ஸ் தெரிவிக்கையில், நான்கு ஆண்டுகளில் தைவானை ஆக்கிரமிக்க தயாராக இருக்குமாறு தனது இராணுவத்திற்கு ஜி உத்தரவிட்டுள்ளார் என்றார்.

இதனால் ஜனாதிபதி ஜி 2027ல் படையெடுப்பை முன்னெடுப்பார்ர் என்று பொருளல்ல என குறிப்பிட்டுள்ள வில்லியம் பர்ன்ஸ், இது அவரது இலக்கின் தீவிரம் மற்றும் அவரது லட்சியத்தை நினைவூட்டுகிறது என்றார்.

மேலும், வல்லரசாக தம்மை காட்டிக்கொண்டுள்ள ரஷ்யா தற்போது உக்ரைனில் தடுமாறும் காட்சிகளும் சீன ஜனாதிபதிக்கு பாடமாக அமையும் என்றார். ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது படையெடுப்பதற்கு சற்று முன்பு கடந்த பிப்ரவரியில் ரஷ்யாவும் சீனாவும் வரம்புகள் இல்லாத கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மேற்கு நாடுகளுடனான ரஷ்யாவின் தொடர்புகள் சரிவடைந்துவிட்டதால் அவர்களின் பொருளாதார இணைப்புகள் பெருகிவிட்டன. மேலும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவிக்கவும் மறுத்தது.

ஆனால் நேரிடையாக ரஷ்யாவுக்கு இந்த விவகாரத்தில் உதவுவதையும் தவிர்த்தது, இதனால் ரஷ்யா எதிர்கொள்ளும் பொருளாதார தடைகளில் இருந்து சீனா தப்பியது குறிப்பிடத்தக்கது.