குவாட்டில் 6ஜி தொழில் நுட்பம்… சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்க அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடன் இந்தியா..!

6ஜி தொழில்நுட்பத்தில் சீனாவை சமாளிப்பதற்காக இந்திய, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க நாடுகள் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளன.

இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சீனா கடந்த 2019ம் ஆண்டு முதலே 6ஜி தொழில்நுட்பத்தில் கோலோச்சும் விதமாக தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப சேவைக்காக குவாட் (QUAD) என்ற பெயரில் கூட்டமைப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்தோ – பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த இந்த அமைப்பின் சீனியர் சைபர் தொழில்நுட்ப குழு ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில், டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் வெளியாகியுள்ள பத்திரிகை செய்தியில், ‘நாட்டின் பாதுகாப்பில் டெலிகாம் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பாதுகாப்பான சைபர் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பது ஆகியவற்றில் குவாட் நாடுகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக 6ஜி தொழில்நுட்ப வடிவமைப்பு, இணைய பாதுகாப்பு சிறந்த நடைமுறைகளை உறுதிப்படுத்த முயற்சி செய்வோம்.

தகவல் மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்கள், கொள்கை, சட்ட அதிகார கட்டமைப்புகள் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்புடன் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை தொடங்க இந்தக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நீண்ட கால செயல்திட்டமாக, இணைய பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்பங்களை கையாளுதல், தனியார் துறை பாதுகாப்புக்கான தளங்களை நிறுவுதல், தொழில்நுட்ப அமைப்புகளுக்கு விநியோக சங்கிலி பாதுகாப்பு கட்டமைப்பை உறுதி செய்வதற்கான வழிமுறை உருவாக்குதல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவற்றில் தொழில் அமைப்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சீனா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதை கவனத்தில் கொண்டுதான் குவாட் நாடுகளின் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.