நாளை கோவை வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கோவை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.இதற்காக அவர் நாளை (சனிக்கிழமை) 11-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பல்லாயிரகணக்கான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மஹாலுக்கு செல்கிறார். அங்கு மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழா நடக்கிறது..இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்த 3 ஆயிரம் பேர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொள்கின்றனர். அவர்களை முதலமைச்சர் வரவேற்று பேசுகிறார்.இந்த நிகழ்ச்சி முடிந்ததும், ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.பின்னர் மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக கருமத்தம்பட்டிக்கு செல்கிறார். கருமத்தம்பட்டியில் விசைத்தறி, கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது. விழா முடிந்ததும், கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு இரவு 8 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து, விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.